May 22, 2004

நெருப்புக்குள் தூங்க முடியுமா? - 2

வறுமையில் வாடிய மேன்மக்களிலே பாரதியும் ஒருவன். தேசபக்தனாய், கவிஞனாய்ப் புகழ்பெற்ற பின்னும் வறுமை அவனை விட்டு நீங்கவே இல்லை. அவன் வறுமையைப் பற்றிச் சொல்வதைக் கேளுங்கள்:

பொருளிலார்க் கிலை யிவ்வுலகு என்ற நம்
புலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்று காண்
பொருளிலார்க்கு இனமிலை, துணையிலை
பொழுதெலாம் இடர் வெள்ளம் வந்து எற்றுமால்


(சுயசரிதை, பாடல் 43)

ஆக, கொடிதினும் கொடிதாகிய வறுமை இருக்கும் போது மேலே கூறிய அத்தனைத் துன்பங்களும் வந்து சுற்றிக்கொள்ளும். அது எப்படி என்றால் நெருப்புச் சூழ்ந்தது போலவாம். ஓர் ஓலைக்குடிசையில் ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கிறான். குடிசையில் நெருப்புப் பற்றிக்கொண்டுவிட்டது. 'சரி, அது எரிந்து முடியட்டும். நாம் தூங்கி எழுந்து பார்த்துக் கொள்ளலாம்' என்று அவன் தன் தூக்கத்தைத் தொடரமுடியுமோ?

அப்படி நெருப்புக்கு நடுவிலே தூங்குவது ஒருவேளை சாத்தியமானால் கூட, வறுமைகொண்டவன் கண்மூடுவது சாத்தியமே இல்லை என்கிறார் வள்ளுவர்.


நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாது ஒன்றும் கண்பாடு அரிது


(குறள் 1049, நல்குரவு)

[நிரப்பு - வறுமை; கண்பாடு - உறக்கம்]

இந்த நெருப்பைப் பற்றித் தெரிந்துகொள்வது வெறும் இலக்கிய ரசனைக்காக அல்ல. இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று தெரிந்தபின் நமக்கு உறக்கம் வரக்கூடாது. நமது வருமானத்தில் பத்து சதவிகிதம் தரும காரியங்களுக்குச் செலவிட வேண்டும் என்று அறநூல்கள் சொல்கின்றன.

ஒன்று யோசித்துப் பாருங்கள், காயசண்டிகைக்காவது பன்னிரண்டு ஆண்டுகள் கழித்தால் சாபவிமோசனம் உண்டு. நம் நாட்டு ஏழைகளுக்கு? ஆகவேதான் தனக்கு உணவளித்துக் காக்கும் ஒரு வள்ளலைப் புறநாற்றுப் பாணன் ஒருவன் "பசிப்பிணி மருத்துவன்" (புறநானூறு: பாடல் 172) என்று போற்றினான்.

மார்கழி மாதம் பாவை நோன்பிருக்கும்போது "நெய்யுண்ணோம், பாலுண்ணோம்..." என்று தனக்கான கட்டுப்பாடுகள் மட்டிலுமே கூறாது, "ஐயமும் பிச்சையும் ஆந்துணையும் கைகாட்டி" என்று அறம் செய்வதையும் வலியுறுத்துகிறாள் கோதை நாச்சியார் தன் திருப்பாவையில். கிட்டத்தட்ட அதே சமயத்தில் வரும் ரமலான் திருநாளை ஈகைப் பெருநாள் என்றே கொண்டாடுகின்றனர் மகமதியச் சகோதரர்கள். கிறித்தவ மதமோ கருணையைத் தனது தனியுரிமையாகவே கொண்டாடுகிறது. எப்படியிருப்பினும் எந்த மதமும் வருடத்தில் ஒரு மாதம் மட்டும் ஏழைகளுக்கு அன்னமிடு, ஏனைய நாட்களில் எரிந்து விழு என்று சொல்வதில்லை. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வலியுறுத்துவதன் காரணம், ஒருமுறை பழகிவிட்டால் நல்லவற்றை நாம் தொடர்ந்து செய்வோம் என்பதுதான்.

"எல்லோருக்கும், அவர் இவர் என்று வித்தியாசம் பார்க்காமல், உணவளியுங்கள். நீங்கள் உண்ணுமுன்னாலே இதைச் செய்துவிட்டு உட்காருங்கள். ஏராளமாய்ப் பொருளைச் சேர்த்து வைக்காதீர்கள். காணாததைக் கண்டவர் போல மிக அவசரமாக உணவு உண்ணாதீர்கள். காக்கை எக்காலமாய் இருந்தாலும் பிற காகங்களை அழைத்துவிட்டுத்தான் உண்ணும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்" என்று திருமந்திரம் சொல்கிறது.

ஆர்க்கும் இடுமின்; அவர் இவர் என்னன்மின்;
பார்த்திருந்து உண்மின்; பழம்பொருள் போற்றன்மின்;
வேட்கையுடையீர்! விரைந்து ஒல்லை உண்ணன்மின்;
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே!


(திருமந்திரம் 250)

பிறந்த நாள், மணநாள், புத்தாண்டு என்று ஏதோ ஒரு காரணம் கற்பித்து ஆடம்பரமான விருந்துகளுக்குச் செலவழிக்கத் தயங்காத நாம் ஓர் ஏழைக்கு ஒரு ரூபாய் கொடுக்க ஆயிரம் தத்துவம் பேசுவோம். "நல்ல தடியனாக இருக்கிறானே, வேலை செய்தால் என்ன?" என்றெல்லாம் சொல்லுவோம். உண்மையிலேயே பாத்திரம் அறிந்து பிச்சை இடுவதற்காக இப்படிப் பேசினால் வரவேற்கத் தக்கதுதான். ஆனால் தர்மம் செய்வதைத் தவிர்ப்பதற்காகப் பேசும் சாமர்த்தியப் பேச்சாக இது இருந்து விடக்கூடாது.

ஒருவருக்காவது நெருப்பின் நடுவில் தூங்காத நிலை உங்களால் ஏற்படுமேயானால் அது வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுக்கும். 'பசியால் வாடுகிறவனின் வயிறுதான் உங்கள் செல்வத்தை வைப்பதற்கு மிகப் பாதுகாப்பான வங்கி' என்று வள்ளுவன் சொல்லியிருப்பது தெரியுமா?


அற்றார் அழிபசி தீர்த்தல் அ·து ஒருவன்
பெற்றான் பொருள் வைப்புழி


(குறள் 226, ஈகை)

[அற்றார் - வறியவர்; அழிபசி - கொல்லும் பசி; தீர்த்தல் - தீர்ப்பாயாக; பெற்றான் - பணக்காரன்; வைப்புழி - சேமிக்கும் இடம்]

இது வட்டி வீதம் குறையவே குறையாத வங்கி, என்றைக்கும் இழுத்து மூடி முதலுக்கு நட்டம் ஏற்படுத்தாத வங்கி, நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் உங்களைத் தேடிவந்து பலன் தரும் வங்கி, உங்கள் சந்ததியாருக்கும் நன்மை செய்யும் வங்கி. குறைந்த பட்சம் ஆத்ம திருப்தியை உடனடியாகத் தரும் வங்கி.

சரி, வருமானத்தில் 10 சதவீதம் அதிகமாகத் தோன்றினால், 5 விழுக்காட்டிலிருந்து... வேண்டாம் 2 பெர்சன்ட்டிலிருந்து தொடங்குவது எப்படி? எனைத்தானும் நல்லவை செய்க...

வாருங்கள் பசித்தீயை அணைப்பதிலிருந்து தொடங்கி, வறுமைத்தீயை ஒழிப்போம்.

4 comments:

Anonymous said...

அனுப்புநர்: வாசன்

பெரியவரின் புகைப்படம் மனதை குறுகுறுக்க வைக்கிறது.

40 நிமிடம் கழித்து வெந்தய தோசை சாப்பிடவிருக்கும்
போது மரத்து போய்விடலாம் மனம் ;(

அடுத்த வேளைக்கு உணவில்லாமல் தவிக்க வேண்டியதை,
பட்டுப் பார்த்தால் மட்டுமே முழுவதாக உணர முடியும் என்று நினைக்கிறேன்.நம்மில் பலருக்கு வாய்த்திருக்க வழியில்லை.
எனது தந்தைக்கு ஓரளவு பரிச்சயமுண்டு.

முடிந்த போதெல்லாம் எம்மால் முடிந்த அளவு உதவ பார்க்கிறோம்.என் மகனின் முதல் 3 பிறந்தநாட்களின் போது அன்னை தெரேசாவின் சகோதரிகளால் இங்கு நடத்தப்பட்டு வரும் soup kitchen (casa san martin) க்கு மளிகை வாங்கி கொடுத்து மனநிறைவு பெற்றோம்.( புது மெக்சிக்கோ மாநிலம் ஏழ்மை அதிகமான மாநிலங்களில் தலை 2/3 இடம் எப்போதும்).

6 வருடங்களாக செய்யவில்லை.திரும்பவும் ஆரம்பிக்க வேண்டும்.உங்களது கட்டுரை தூண்டுதலாக நினைவூட்டுகிறது.

Madhurabharati said...

«ýÒûÇ Å¡ºý,

þÄ츢Âõ, ºÁÂõ ±øÄ¡§Á Å¡ú쨸¢ý ¿¢ƒí¸¨Çò ¦¾¡ðÎ측ðÊ, ¦ºÂøÀ¼ ¨Å츧ÅñÎõ. þø¨Ä¦ÂýÈ¡ø «¨ÅÔõ ¦ÅÚõ ¦À¡ØЧÀ¡ìÌò¾¡ý ±ýÚ ¬¸¢Å¢Îõ. ¯í¸û ¸ÕòÐ þ¾ý ¦À¡ÕðÎ ¿¡ý ¦ºÄŢ𼠧¿Ãò¨¾ô ÀÂÛûǾ¡¸ ¯½Ã¨Å츢ÈÐ.

¿ýÈ¢

Anonymous said...

Unga Guru photo is really attractive!

Anonymous said...

«ýÚ ÅûÙÅý ãðÊ ¾£¨Â
þýÚ «¨½Â¡Áø ¸¡òÐ
±í¸û «Õ¸¢ø ¨ÅòÐ
ÌÇ¢÷ ¸¡Âî ¦ºöÔõ
ÁÐÃì ¸Å¢Ã¡Â§Ã
¯í¸û ÌÇ¢÷îº¢Â¡É ±Øò¾¡ø
ÌÇ¢÷ ¾ûÇ¢ô §À¡É¡Öõ
ÌÇ¢÷ Å¢ðÎô §À¡¸¡Áø
¸ÅÉÁ¡öô ÀÊô§Àý
±ØÐí¸û þýÛõ.

«ýÒ¼ý
R.S. Á½¢