May 17, 2004

திருக்குறள் சொல்லும் தீக்கள் - 3



தலைகீழ் நெருப்பு
=============

இப்போ நாம பாக்கப் போறது தலைகீழ் நெருப்பு. ஹார்மோன் நெருப்பு.

சாதாரணமா நெருப்பு ரொம்பப் பக்கத்தில் போனால் சுடும், விலகினால் குளிரும் - அப்படி நெருப்பைத்தான் குறள் 691-ல் பார்த்தோம்.

ஐயா மெடிக்கல் ரெப். கொடைக்கானலுக்குப் போயிருக்கிறார் தொழில் நிமித்தமாய். வெய்யில் தாங்கமுடியாமல் ஏராளமான மக்கள் அங்கே வந்து குவிந்திருக்கிறார்கள். ஜோடி ஜோடியாகக் காதலர்களும் தான். இவர் டாக்டர் வீட்டு வாசலில் கனத்த பையோடும் அதைவிடக் கனத்த மனதோடும் உட்கார்ந்திருக்கிறார். இவருக்குக் கொடைக்கானல் பிடிக்கவில்லை.

அங்கிருந்து புறப்பட்டு இன்னொரு மருத்துவரைப் பார்க்கப் போகிற வழியில் படகுத்துறை. அங்கே பூங்கொத்துக்கள் போல ஆண்களும் பெண்களும். பெடலிங் படகில் அசட்டுத் தனமான ஜோக்குகளுக்கெல்லாமல் அடக்கமுடியாமல் சிரித்துக் கொண்டு, சாதாரண சா·ப்டியை தேவாமிருதம் போலச் சுவைத்துக்கொண்டு, மேலே ஒட்டிய சருகைத் தட்டிவிடுகிறாற்போலத் தொட்டுப்பார்த்துகொண்டு, திடீரென்று பேச மறந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, 'அடடா, அரைமணி நேரம் முடிந்து விடுமே, படகிலிருந்து இறங்கவேண்டுமே' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு - எத்தனை காதல் ஜோடிகள்!

நம்ம ஆளுக்கு மட்டும் கொடைக்கானல் சுடுகிறது. இவனுடைய 'அவள்' வேறொரு ஊரில் இருக்கிறாள். மரத்தைப் பார்த்தால், பூவைப் பார்த்தால், காற்று வீசினால், சூரியன் எழுந்தால், ஒரு நல்ல பானி-பூரி சாப்பிட்டால், வெளிர்நீலப் புடவையைப் பார்த்தால், மல்லிகையைப் பார்த்தால் - இவனுக்கு அவள் ஞாபகம் வந்துவிடுகிறது. இரவு நேரம் வந்தது. பகலைவிட எல்லோருக்கும் அதிகக் குளிராக இருக்க, இவனுக்கு இரவில்தான் அதிக வெம்மை.

படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு அவன் யோசிக்கிறான்: "இவளுக்கு மட்டும் இந்த அதிசய நெருப்பு எங்கிருந்து வந்தது? இவளை விட்டு அகன்று போனால் அது சுடுகிறதே. அதிக தூரம் நீங்கிப் போனால் அதிகம் சுடுகிறது. ஆனால் அவளருகில் போனால் வெம்மை அடங்கிவிடுகிறது. அணைத்தாலோ, சிலீரென்று குளிர்ச்சியாக இருக்கிறதே. எங்கே பெற்றாள் இந்த நெருப்பை?"

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்


(குறள்: 1104)

[தெறும் - சுடும்; குறுகுங்கால் - நெருங்கும்போது]

எல்லோரும் எப்போதோ ஒருமுறையாவது அனுபவித்த நெருப்புதானே இது.

3 comments:

SnackDragon said...

Warm welcome to tamilblogs...

Anonymous said...

¦Á¡Æ¢Â¢ø ¦Á¡Æ¢Ôõ ÓØÐõ «ÆÌ.

«ýÒ¼ý
¸ƒý

Madhurabharati said...
This comment has been removed by a blog administrator.