May 20, 2004

மின்னம்பல வெண்பாக்கள் (எளிய விளக்கத்தோடு)

இணையத்தில் முதன்முதலில் (டிசம்பர், 1999) வெளியான என்னுடைய வெண்பாக்கள் இவை. அப்போதே வெண்பா என்ற மரபுவடிவத்தில் அதிநவீனமான Internet என்னும் மின்னம்பலத்தைப் பாட முயற்சித்ததைக் கவனியுங்கள். ஓரளவு வெற்றியும் கண்டதாகவே நினைக்கிறேன். இது ஆறாம்திணை இணைய இதழில் நண்பர் வாஞ்சிநாதன் தொடர்ந்து தொகுத்து எழுதி வந்த 'வெண்பா மேடை'யில் வெளியாயிற்று.

படிப்பவருக்கு எளிதாக இருக்கும் பொருட்டு, நான் அதை மீண்டும் இங்கே என் உரையோடு கொடுக்கிறேன்.

1. வீட்டிலேயே தல யாத்திரை


அலையார் அறுபடையும் மாலோன் உறையு
மலையாரே ஏறிடுவார் மண்ணில் - கலையாகும்
பொன்னம் பலம்வேண்டார் தன்னம் பலம்கொண்ட
மின்னம் பலக்கணினி யார்.

தன்னுடைய வீட்டில் சொந்தக் கணினியிலே இணைப்பை வைத்துக்கொண்டு அதில் வலைமேய்கிறவர்கள் அறுபடை வீடுகளுக்கும் போக மாட்டார் என்னும்போது திருமால் வசிக்கும் திருமலையில் ஏறுவாரா என்ன! அதேபோல அவர்களுக்குச் சிவபெருமான் இருக்கும் பொன்னம்பலமாகிய சிதம்பரமும் தேவையில்லை.

(எல்லா 'தெய்வீகப் பேரின்பத்தை'யும் வலையிலே கண்டுவிடுவர் என்பது தாத்பரியம்)

2. பிள்ளையாருக்கு வந்த 'மவுஸ்'

முன்னம் ஒருநாள் முருகன் வயிறெரியத்
தின்ன கனிக்கதையும் தீதன்று - சின்னதோர்
சுண்டெலியால் மூவுலகம் சுற்றிவரும் சூட்சுமமும்
கண்டோம் கணினியின் கண்.

முன்னால் ஒருகாலத்தில் சுண்டெலி வாகனப் பிள்ளையார் சுருக்கமான வழியில் உலகை வலம் வந்து ஞானப் பழத்தை வென்று முருகன் வயிற்றெரிச்சலைக் கொண்டது மெய்தான் போலும்! இப்போது பார்த்தால் இத்தனை பிள்ளையார்கள் உட்கார்ந்த இடத்தில் 'மவுஸின்' உதவியோடு உலகை வலம் வருகிற தந்திரத்தைக் கற்றுக்கொண்டுவிட்டார்களே!

3. மின்வலை என்னும் மாதவியோ?

ஆடக் களமுண்டு பாடத் தலமுண்டு
கூடக் குறுநகையார் கூடமுண்டு - ஊடாடும்
மின்வலையின் மாயங்கொள் பின்னலிலே வீழ்ந்தாரும்
பின்வருவ துண்டோ பிரிந்து.

இந்த மின்வலைக்குள்ளே நுழைந்துவிட்டால் ஆடல், பாடல் எல்லாம் பார்க்கலாம். துணைக்கு அழகிய இளம்பெண்களும் உடன் வருவர் (மின்வெளியில்தான்!). இப்படிப் பின்னலிடும் மின்வலைக்குள் விழுந்தவர்கள் மீண்டும் திரும்பிவந்ததாகச் சரித்திரம் உண்டோ?

4. இதுவும் ஒரு சக்களத்திதான்


உண்ணார் உறங்கார் ஒருபாதி யானதொரு
பெண்ணாள் முயக்கமும் பேணிடார் - எண்ணாது
புக்கார் கணினிப் பொதுவலையில் அஃதொக்கும்
சக்களத்தி உண்டாமோ சாற்று.

கணினியில் விரியும் இந்த வலையில் நுழைந்தவருக்கு அதுவே சக்களத்தியாகும். ஏனென்றால், ஒருமுறை இதன் சுவைகண்டவர் சாப்பாடு, தூக்கம், தன்னில் பாதியான தன் மனைவியின் முயக்கம் ஆகிய எல்லாவற்றையும் மறந்து போய்விடுவார்கள்.

5. சொர்ணம் கூட பலமல்ல

சொன்னம் பலமல்ல சுற்றம் பலமல்ல
இன்னம் எதுவும் பலமல்ல - துன்னுமோர்
சின்னத் திரையுள் செகமெல்லாம் காட்டுகின்ற
மின்னம் பலமே பலம்.

(சொன்னம்பலமல்ல - சொர்ணம் பலமல்ல)

இந்த யுகத்திலே, தங்கம் ஒருவனுக்கு வலிமை தருவதிலை; சுற்றத்தார் தருவதில்லை; வேறு எதனாலும் அவனுக்கு பலம் சேருவதில்லை. மிகச்சிறிய திரையைக் கொண்ட கணினிக்குள்ளே இந்த உலகத்தையெல்லாம் தந்து காட்டுகின்ற மின்னம்பலம் என்னும் அந்த பரவெளியே பலம்.

இப்போ சொல்லுங்க -- வெண்பா எந்தப் புதுக்கவிதைக்காவது குறைச்சலா என்ன? இன்றைய விஷயத்தை இவ்வளவு சுளுவாக, அழகாக, தெளிவாக சொல்லமுடியுதே. "ஆடத்தெரியாத...." என்று தொடங்கும் பழமொழி ஒண்ணு உண்டாமே?

(நன்றி: பேராசிரியர் பசுபதி, கனடா. என் கைவசம் இல்லாத இந்த வெண்பாக்களை எனக்கு நினைவூட்டித் தன் சேமிப்பிலிருந்து தந்தமைக்கு)

No comments: