June 10, 2004

யாரந்த நப்பின்னை?

விஷ்ணுவின் எல்லா அவதாரங்களையும்பற்றி விரிவாகப் பேசும் பாகவதம் கிருஷ்ணாவதாரத்தை மிகமிக விரிவாகப் பேசுகிறது. அது ராதை என்ற பெயரைச் சொல்வதே இல்லை. நப்பின்னை என்பது ராதையல்ல.

திருப்பாவையில் 'நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்' என்று நப்பின்னையை அழைக்கிறார் கோதை. பார்க்கப் போனால் மூன்று பாடல்களில் தொடர்ந்து ஆண்டாள் நப்பின்னையை விவரித்திருக்கிறாள். வேறு எந்தப் பிராட்டியின் பெயரையும் சொல்லவில்லை. ஆண்டாள் அழைக்கின்ற வேளை அதிகாலைப் பொழுது. தந்ததினால் செய்த கால்களையுடைய கட்டில்மேல் கண்ணன் தனது மனைவியான நப்பின்னையின் மார்பின்மேல் தன் மலர்மார்பை வைத்து உறங்கிக் கொண்டிருக்கிறானாம். அவளோ கண்ணன் தன்னைவிட்டு அகன்று போவதையே பொறுக்காதவளாம். எனவே அவளைச் சமாளித்தால்தான் கண்ணன் துயிலெழுந்து வந்து இவர்களது பாவை நோன்புக்கான உக்கமும், தட்டொளியும் (விசிறியும், கண்ணாடியும்) முதலியன தந்து பாவை நோன்பை முடித்து வைப்பான். எனவே அத்தையுடன் தன் சொந்த வீட்டில் இப்படிப் படுத்திருக்கச் சாத்தியம் இல்லை.

அப்படியானால் நப்பின்னை என்பது யார்? யசோதையின் சகோதரனான கும்பன் என்ற நக்னஜித் அயோத்தியின் மன்னனாக இருந்தான். அவனுடைய மகளை சத்யா, சௌந்தர்யவதி என்றும் நக்னஜிதை என்றும் அழைத்தனர். இவள்தான் நப்பின்னை என்று பெரியோர் கருதுகின்றனர். இவள் கிருஷ்ணனுக்கு மாமன் மகளாகிறாள். ராதையை அத்தை என்றல்லவா சொல்கிறார்கள்?

சிறுவனான கண்ணன் பசுக் கொட்டிலிலே விளையாடி உடலெல்லாம் மண்ணாக்கிக் கொள்கிறான். அவனுடைய தாய் யசோதை சொல்கிறாளாம் "நீ பசுத் தொழுவத்தில் உடலை மண்ணாக்கிக் கொண்டதைப் பார்க்க எனக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. (இந்தக் காலத்தில் ஒரு தாயார் இப்படிச் சொல்ல வாய்ப்பே இல்லை.) ஆனால் ஊரார் பழிப்பார்களே! அட வெக்கமில்லாத பயலே, உன்னை நப்பின்னை பார்த்தால் சிரிப்பாளே! வா குளிக்க" என்று. பாடல் இதோ:

பூணித் தொழுவினிற் புக்குப்
புழுதியளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன்
ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் இத்தனையும் இலாதாய்!
நப்பின்னை காணிற் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே!
மஞ்சனம் ஆடநீ வாராய்!


(நாலாயிர திவ்வியப் பிரபந்தம்: பெரியாழ்வார் திருமொழி: 160)

[பூணி - பசு]

மாமன் மகள் உன் அழுக்குத் திருக்கோலத்தைப் பார்த்துச் சிரிப்பாள் என்று சொல்லித்தான் குளிக்கவைக்கிறாள் யசோதை கண்ணனை. தமிழில் பிஞ்ஞை என்றால் மயில். மயில்தோகைபோன்ற அழகிய கூந்தலை உடையவள் நப்பின்னை என்பது பொருள்.

சிலப்பதிகாரத்தில் நப்பின்னையைப் பற்றி 'ஆய்ச்சியர் குரவை'யில் வருகிறது. காட்சி இது: பாண்டிய மன்னன் தவறாகக் கோவலனைக் கொன்றுவிடுகிறான். செங்கோல் வளைந்துவிடுகிறது. இங்கே ஆயர்குடியில் இருக்கும் பெண்களுக்குத் தீய நிமித்தங்கள் தோன்றுகின்றன. பால் தயிராக உறையமாட்டேன் என்கிறது; திரண்ட திமிலை உடைய காளைகளின் கண்களில் நீர் வழிகிறது. முதல்நாள் சிலுப்பி உறியிலே எடுத்து வைத்த வெண்ணை உருக மாட்டேன் என்கிறது. துள்ளிவிளையாடும் இயல்பை உடைய ஆட்டுக்குட்டிகள் அசையாமல் கிடக்கின்றன. பசுக் கூட்டங்கள் தம் உடல் நடுங்க அலறுகின்றன. அவற்றின் கழுத்திலே இருக்கும் மணிகள் காரணமின்றி அறுந்து விழுகின்றன. இவற்றை எல்லாம் பார்த்த மாதரி "இந்த நிகழ்வுகள் நமக்கு ஏதோ ஒரு தீமையை முன்னறிவிக்கின்றன" என்று தன் மகளிடம் சொல்லுகிறாள்.

"இந்தத் துன்பம் நீங்கவேண்டுமானால், மாதர்க்கு அணிகலனாகிய கண்ணகி நம்மோடு இருந்து காண, ஆயர் குல தெய்வமாகிய கண்ணன் தன் மனைவி நப்பின்னையோடு ஆடிய குரவைக் கூத்தை நாம் ஆடவேண்டும்" என்று மாதரி சொல்கிறாள்.

மகளை நோக்கி "மனம் மயங்காதே!
மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய
கண்ணகியும் தான் காண
ஆயர் பாடியில் எருமன்றத்து
மாயவனுடன் தம்முன் ஆடிய
வாலசரிதை நாடகங்களில்
வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய
குரவை ஆடுதும் யாம்" என்றாள்
கறவை கன்று துயர் நீங்குக எனவே


(சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை)

[தம்முன் - தன் முன்னவனான பலராமன்]

எனவே கண்ணன் பலராமன் மற்றும் நப்பின்னையோடு பொதுவிடத்தில் வாலசரிதையைக் குரவையாக ஆடியிருக்கிறான். ராதையோடு இவ்வாறு ஆடியிருக்க முடியாது என்று கருதுவோர் உண்டு. பரிபாடலிலும் நப்பின்னை பற்றிய குறிப்பு உண்டு.

மாமன் மகளே ஆனாலும் கண்ணன் அவளை எளிதில் அடைந்துவிடவில்லை. மாமன் கும்பன் ஒரு நிபந்தனை வைத்தான். அவனிடம் ஏழு முரட்டுக் காளைகள் இருந்தன. இவற்றை அடக்குபவருக்கே தன் மகள் மாலை சூட்டுவாள் என்று சொன்னான். இதை அறிந்த கண்ணன் அவற்றையடக்கி நப்பின்னையைக் கைப்பிடித்தான். ஆனால், இந்தக் கதை தென்மாநிலங்களிலேயே அதிகம் வழங்குகிறது என்பர் அறிந்தோர். சன் டி.வி.யின் காலைமலர் நிகழ்ச்சியில் பேசிய ஒரு வைணவ அறிஞர் வட இந்தியாவில் புழங்கும் பாகவதத்தைவிடத் தென்னிந்தியாவில் புழங்கும் பாகவதத்தில் சுமார் 800 (நான் நினைவிலிருந்து தரும் எண்ணிக்கை ஏறக்குறைய இருக்கலாம்) வடமொழிச் செய்யுள்கள் அதிகம் இருக்கின்றன என்று கூறினார். முந்நாளில் தென்னிந்தியாவில் சமஸ்கிருத அறிஞர்கள் அதிகமிருந்தனர், அவர்கள் சிறந்த செய்யுள் இயற்றும் வன்மை பெற்றிருந்தனர், இங்கே பாகவதக் கதைகள் வடக்கை விட அதிகமாகவும் இருந்தன என்பவற்றை இது காட்டுவதாகவும் அவர் சொன்னார்.

திருமாலுக்கு மனைவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்பர். இதிலே நப்பின்னை நீளாதேவி(கடல்தாய்)யின் அவதாரம் என்று வைணவ மரபு உண்டு. எனவே இவரை இளையபிராட்டி என்பதும் ஒரு சம்பிரதாயம். ஆனால் நப்பின்னை மிகவும் விவாதத்திற்குரிய, விவாதிக்கப்பட்ட விஷயம் என்பதல் இந்தப் பத்தியில் நான் சொல்லும் ஒவ்வொன்றும் அறுதியிட்டுச் சொல்லப்படுவனவல்ல.

கடைசியாக ஒரு கேள்வி. கீழே வரும் செய்யுள் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுல் ஒன்றான பொய்கையாரின் 'இன்னிலை'யில் காணப்படுகிறது. இதிலே நப்பின்னை என்ற சொல் வரக் காண்கிறோம். என்ன கருத்துப் புலத்தில்?

ஒப்புயர்வில் ஞாலம் ஒருநிலைப்பட்டாழ்ந்த செயல்
நப்பின்னை ஞாலம் ஒருங்கறிக - துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க
ஏமக் கிழத்தி அறிந்து.


(இன்னிலை: பாடல் 22)

No comments: