July 06, 2004

கண்ணாடி சொல்லும் கதைகள் - 1

இப்போதெல்லாம் பெருநகரங்களில் இருக்கும் வானுயர மகாவணிகக் கட்டிடங்களின் முன்புறம் முழுக்கக் கண்ணாடியால் மினுங்குமாறு கட்டப்படுகிறது. ஆனால் அவை ஒருவழிப் பார்வை கொண்டவையாய் உள்ளன. வெளியே இருப்பவருக்கு உள்ளிருப்பது தெரியாது. உள்ளே மெல்லிய வெள்ளீயப் படலம் கொண்ட மிதவைக் கண்ணாடி (float glass) வகையைச் சேர்ந்தவை அவை.

ஆனால் அவ்வாறில்லாமல் நிறமற்ற கண்ணாடியாலேயே அறை கட்டியிருந்ததை தமிழ்க் காவியமான மணிமேகலை விவரிக்கிறது. மாதவியின் மகளான மணிமேகலை, புத்தமதத்தை மேற்கொண்டு, துறவறம் பூண்டு, தன் தோழி சுதமதியோடு உவவனம் என்ற மலர்வனத்துக்குச் செல்கிறாள். அவள் மீது மிகவும் காதல் கொண்டிருக்கிறான் உதயகுமாரன். இவன் கரிகாற் சோழனின் வழிவந்த அரசகுமாரன். வழியிலே எட்டிகுமாரன் என்பவன் மூலம் மணிமேகலை உவவனம் போயிருக்கிறாள் என்பதை அறிந்து, அங்கே போய் அவளைத் "தேரில் ஏற்றிக்கொண்டு வருவேன்" என்று சொல்லிப் போகிறான்.

அவன் தேரொலி கேட்டதுமே அவளைச் சுதமதி பளிக்கறை என்னும் கண்ணாடி அறையில் வைத்துத் தாழிட்டுவிடுகிறாள். அந்தப் பளிக்கறை எப்படிப்பட்டது தெரியுமா?

விளிப்பறை போகாது மெய்புறத் திடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு அதனுள்


(மலர்வனம் புக்க காதை: 63-64)

[விளிப்பறை போகாது - அழைத்தால் அது அறைக்கு வெளியே கேட்காது; மெய் புறத்து இடூஉம் - உருவத்தை வெளியே காட்டும்; பளிக்கறை - பளிங்கு அறை, கண்ணாடி அறை]

"அந்தக் கண்ணாடியறைக்கு வெளியே இருந்து பார்ப்பவர்க்கு உருவம் தெரியும், ஆனால் ஒலி வெளியே கேளாது". எனவே இந்தப் பளிக்கறை வெறும் கவிஞனின் கற்பனையல்ல. மிகத் துல்லியமாகக் கண்ணாடியறையின் தன்மை சொல்லப்படுகிறது.

உதயகுமாரன் வந்து தேடுகிறான். பளிக்கறைக்குள் பேரழகோடு பவழத்தால் செய்த பதுமை ஒன்று இருப்பதுபோல அவனுக்குத் தெரிகிறது. பிறகு மணிமேகலைதான் அது என்று உணருகிறான். அவனுக்கு அவசரம். ஒன்றுபோலக் கண்ணாடித் தகடாக இருக்கும் அந்தச் சுவற்றில் அவனால் தாழ்ப்பாள் எங்கே இருக்கிறது என்றுகூடக் கண்டுபிடிக்கமுடியவில்லை. கையால் தடவிப்பார்க்கிறான். பயனில்லை.

காவி அங்கண்ணி ஆகுதல் தெளிந்து
தாழொளி மண்டபம் தன் கையிற் தடைஇச்
சூழ்வோன்


(மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை: 8-10)

[குவளைமலர் போல அழகிய கண்களை உடைய மணிமேகலைதான் அது என்பதைத் தெரிந்துகொண்டு உதயகுமாரன் தன் கையாலே தடவி மண்டபத்தின் தாழ்ப்பாளைத் தேடுகிறான்.]

கண்டுபிடிக்க முடியவில்லை. அவனால் தாழ்ப்பளைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் என்ன பொருள்? தாழ்ப்பளையும் கண்ணாடிப் பொருளாலே செய்திருக்கிறார்கள் என்பதுதானே!

இதே போல சித்திரகூட மலைமீது அமைந்த ஒரு பளிக்கறையைப் பற்றி கம்பராமாயணம் சொல்கிறது. இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும் சித்திரகூட மலையின் அழகை இரசித்தவாறு செல்லுகையில் இராமன் இவ்வாறு சொல்கிறான்:

அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும்
களிப்பு இல் இந்தியத்து யோகியைக் கரக்கிலன் அதுபோல்
ஒளித்து நின்றுளர் ஆயினும் உருத் தெரிகின்ற
பளிக்கு அறைச் சில பரிமுக மாக்களைப் பாராய்


(அயோத்தியா காண்டம்: சித்திரகூடப் படலம்: பாடல் 11)

"இறைவன் மாயைக்குள்ளே தன்னை ஒளித்துவைத்துக் கொண்டிருந்தாலும், புலன்களால் வரும் சுகங்களை ஒதுக்கிய ஞானியருக்கு அவன் தன்னை ஒளித்துக்கொள்வதில்லை. அதுபோலத் தம்மை ஒளித்துக் கொள்ளமுயன்றும், வெளியே உருத்தெரிகின்ற பளிக்கறைக்குள் இருக்கும் கின்னரர்களைப் பார்" என்று இராமன் சொல்கிறான். கின்னரர் என்பவர் குதிரைத் தலையும் மனித உடலும் கொண்டவர். (ஆங்கிலத்தில் centaur என்று அழைப்பதன் தலைகீழ் இணைப்பு. 'Harry Potter and the Sorcerer's Stone' பார்த்திருந்தால் அதில் குதிரை உடலும் தலைப்பகுதியில் இடுப்பிலிருந்து தொடங்கும் மனிதனுமான உருவத்தைப் பார்த்திருக்கலாம்.)

இக்காலத்தில் நாம் பளிங்கு அறை என்றால் சலவைக்கல்லால் கட்டிய அறை என்று புரிந்துகொள்கிறோம். சலவைக்கல் என்பது சுண்ணாம்புக்கல்லின் வேறொரு பவுதீக வடிவம். நாம் தூய வெள்ளைக் கற்களையே சலவைக்கல் என்றாலும், பிற தனிமங்களின் கலப்பால் வெவ்வேறு நிறமும், கோலங்களும் படிந்த சலவைக்கற்களும் உண்டு. சலவைக்கல்லால் ஆனதொரு சிம்மாசனம் 'பாண்டுகம்பளம்' என்ற பெயரில் இந்திரனிடத்து இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. 'பாண்டு' என்றால் வெண்மை. பாண்டவர்களின் தந்தைக்கு வெண்குஷ்டம் இருந்தது என்பதாலேயே அவன் பெயர் வந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால் சலவைக்கல்லுக்கு ஒளி ஊடுருவும் தன்மை கிடையாது. எனவே இந்தக் கட்டுரையில் காணும் எந்தச் சந்தர்ப்பத்திலும் பளிங்கு என்ற சொல்லுக்கு சலவைக்கல் என்று பொருள் வராது.

ஆனால் முன்னரே நாம் பார்த்தது போல, பளிங்கு என்பது கண்ணாடி. அதிலும் ஒரு மாளிகை கட்டுமளவுக்குத் தடிமனும் உறுதியும் வாய்ந்த கண்ணாடிகளை இந்தியாவில் செய்தனர் என்பது வியப்பான செய்தி.

இன்னும் உண்டு...

No comments: