July 06, 2004

கண்ணாடி சொல்லும் கதைகள் - 2

கண்ணாடியின் வரலாற்றைப் பார்த்தால், கிறிஸ்து பிறப்பதற்கு 5000 ஆண்டுகளுக்குமுன் தழைத்த மீசோபொடாமியா (Mesopotamia - இதை மெசபடோமியா என்று உச்சரிப்பது தவறு) நாகரிகத்தில் கண்ணாடிப் பொருட்கள் காணப்பட்டனவாம். எகிப்து நாட்டில் கி.மு. 3500-இல் புழங்கிய பளிங்குச் சாமான்கள் கிடைத்துள்ளன. ஆனால் கண்ணாடியின் வரலாற்றில் இந்தியாவின் பெயர் இல்லை. ஏன் என்பது சிந்தனைக்குரியது. இப்போதிருக்கும் பதின்ம எண் வரிசை இந்தியாவில் தோன்றியதாக இருக்க, அதை 'அராபிய எண்கள்' என்று உலகம் சொல்லிவருவதைப் போன்றது.

சரி, வெறும் கண்ணாடி மாளிகைகள்தாம் இந்தியாவில் கட்டினார்களா? இல்லை வேறு பொருள்களும் செய்யப்பட்டனவா? கம்பராமாயணம் மது அருந்துவதற்கான கண்ணாடிக் கிண்ணத்தைக் குறிப்பிடுகிறது. இரண்டு வகைக் கிண்ணங்கள் பேசப்படுகின்றன:

பளிக்கு வள்ளத்து வாக்கும் பசு நறுந் தேறல் மாந்தி

(மிதிலைக்காட்சிப் படலம்: பாடல்-14)

[படிகக் கண்ணாடி வட்டிலில் வார்த்த மணமுள்ள, பசுங்கள்ளை அருந்தி]

கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி


(உண்டாட்டுப் படலம்: பாடல் -17)

[மணி வட்டிலில் இருக்கும் கள்ளில் காணும் தன் போதையேறிய முகத்தைப் பார்த்து, வானத்தில் இருந்த நிலா மது அருந்தும் ஆசையால் வட்டிலுக்குல் விழுந்ததோ என்று எண்ணி..]

வள்ளம் என்பது உண்ண அல்லது பருகப் பயன்படும் கிண்ணம் அல்லது வட்டில். முதல் பாடல் வரியில் வரும் பளிக்கு வள்ளம் புரிகிறது. அது என்ன மணி வள்ளம்? சாதாரணமாக, மணி என்பது நவமணிகளையும், முத்தையும் குறிக்கும். இதே படலத்தில் கம்பன் மதுவருந்தத் தங்கக்கிண்ணங்களைப் பயன்படுத்தியதாகவும் சொல்கிறான். மணிகளைப் பதிப்பதானால் அதிலேதான் பதிக்கவேண்டும். அதைத் தவிர மீண்டும், மீண்டும் பல பாடல்களில் மணி வள்ளம் என்கிறானே. மணி என்பதற்குப் படிகம் (crystal) என்றும் பொருள் உண்டு. நாம் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியைப் பார்த்தால் பளிக்கறை என்பதற்கு Crystal Palace என்ற பொருளைப் பார்க்கலாம். இப்போதும் உயர்தரக் கண்ணாடியால் செய்யப்பட்ட கெட்டியான கண்ணாடிக் கோப்பை முதலியவற்றைக் 'கிரிஸ்டல்' (படிகக் கண்ணாடி) என்றே வழங்குவதை அறிந்திருக்கலாம். இவை சாதாரணக் கண்ணாடியால் செய்யப்பட்ட பாண்டங்களை விட விலை உயர்ந்தவை.

இதை நான் சொல்வதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. கம்பன் இராமாயணத்தை எழுதிய காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்று பெரும்பாலும் சொல்கின்றனர். சிறுபான்மையினர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு என்கின்றனர். ஆனால் படிகக் கண்ணாடி (Crystal glass) முதன்முதலில் தயாரிக்கப்பட்டது 1765-இல் என்று சரித்திரம் சொல்கிறது. அப்படியானால் இந்தியா இதனை முதலிலேயே அறிந்து, பயன்படுத்தியது என்பதைப் பிறநாட்டு வரலாற்றறிஞர் அறியவில்லை என்றுதானே பொருள்? கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த பிளைனி என்ற கிரேக்க அறிஞர் இந்தியாவில் படிகக் கண்ணாடி இருந்ததாகச் சொல்வதைப் பின்னால் பார்க்கப் போகிறோம்.

நான் முன்னரே கூறிய கி.மு. 5000-இல் கண்ணாடியால் அம்புநுனிகள், கத்திகள் ஆகியவையும் செய்யப்பட்டதாக வரலாறு சொல்கிறது. எரிமலைக் குழம்பு உறைவதால் ஒருவகைக் கருப்பான கண்ணாடி இயற்கையிலேயே கிடைக்கும். இதை 'Obsidian' (ஆப்சிடியன்) என்பார்கள். இந்தக் கண்ணாடியாலேயே ஆதிகாலக் கருவிகள் செய்யப்பட்டனவாம். ஆனால், அவ்வாறல்லாது நல்ல படிகக் கண்ணாடியாலே செய்த நுகத்தடி பொறுத்திய தங்க ஏரினால் வேள்விக்கான நிலத்தைத் திருத்தும்போதே சிவதனுசோடு, சீதாப்பிராட்டியாரை உள்ளே வைத்த பேழை கிடைத்ததாக இராமாயணம் சொல்கிறது.

இரும்பு அனைய கரு நெடுங்கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற
பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து


(கார்முகப் படலம்: பாடல்-16)

[பெரிய கருப்பான இரும்புபோன்ற கொம்புகளை உடைய காளைச் சோடியின் புடைத்த பெரும் கழுத்தில் பளிங்கினாலான நுகத்தடியைப் பிணைத்து...]

அயோவா மாநிலப் பல்கலைக் கழகம் வலையில் பதிப்பித்திருக்கும் கண்ணாடியின் வரலாற்றின் படி கி.மு. 12000-த்திலேயே நீர்க்குடுவைகள், குப்பிகள் மற்றும் ஜாடிகளிலிருந்து நீர் ஒழுகாதிருக்கும் பொருட்டுச் சீனாக் களிமண் பூச்சுப் போன்றதொரு கண்ணாடிப் படலத்தைப் பூசினர் என்று தெரியவருகிறது. இத்துடன் ஒப்பிடத்தக்க ஒன்றைக் கம்பராமாயணத்தில் பார்த்தபோது எனக்கு வியப்புத் தாங்கவில்லை.

அயோத்தி மாநகரத்தைச் சுற்றி ஒரு மதிற்சுவர் இருந்தது. அதற்கு வெளியே செயற்கையாக அமைத்த அகழி ஒன்று இருந்தது. அகழியின் வெளிப்புறச் சுவர் வெள்ளியாலே அமைக்கப்பட்டிருந்தது. உள்புறம் முழுவதும் முதலில் தங்கத் தகட்டினால் பாவப்பட்டிருந்தது. தகட்டின்மேல் முன் சொன்னதுபோலப் படிகக் கண்ணாடிப் பூச்சு ஒன்று தரப்பட்டிருந்தது.

விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளிகட்டி உள்ளுறப்
பளிங்கு பொன்தலத்து அகட்டு அடுத்துறப் படுத்தலின்
தளிந்த கல்தலத்தொடு அச்சலத்தினை தனித்துற
தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவராலும் ஆவதே


(நகரப்படலம்: பாடல்-20)

இப்படி அமைத்ததாலே இரண்டு பயன்கள். ஒன்றைக் கம்பனே சொல்கிறான். இந்த அகழி கற்பாறைகளால் ஆன கோட்டையின் அருகே இருக்கிறது. கோட்டைக்கும் அகழிக்கும் இடைப்பட்ட பகுதியிலும் கருங்கல் தளம் உள்ளது. மேலே சொன்னதுபோல் அமைத்த அகழி ஒரு செம்மையாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே செயல்படும். எனவே கோட்டையின் கற்கள் அதில் தெரியும். அப்போது தூரத்திலிருந்து வருகின்ற எதிரிப் படையினருக்கு அகழிநீர் தெரியாது. கருங்கல் தளத்தின் தொடர்ச்சியாகவே தோன்றும். "தளிந்த கல் தலத்தொடு அச் சலத்தினைத் தனித்துறத் தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவராலும் ஆவதே" என்கிறான் கம்பன். அகழிநீரையும், கருங்கல் தரையையும் இனம் கண்டு பிரித்துச் சொல்லத் தேவராலும் முடியாதாம்!

அடுத்த பயன் கம்பன் சொல்லாதது. அகழி செயற்கையானது. அதற்கு நீரை நிரப்பியாக வேண்டும். அவ்வாறு நிரப்பிய நீர் இரண்டு வழிகளிலே வீணாகும். ஒன்று, பூமி இழுத்துக் கொள்ளும். இரண்டாவது, சூரிய ஒளியில் ஆவியாகிப் போகும். முன்பே நீர்க்குடுவை, குப்பி ஆகியவற்றுக்குச் சொன்னதுபோல் இந்தக் வலுவான கண்ணாடிப் பூச்சு நீர் ஒழுகிப்போக முடியாது தடுக்கும். மேலும் அகழியே ஒரு கண்ணாடி போலப் பளபளப்புடன் இருப்பதால், சூரிய ஒளி பெரும்பாலும் பிரதிபலிக்கப்பட்டு, நீர் வெம்மையாவதையும் குறைக்கும். அப்போது ஆவியாதல் மட்டுப்படும்.

இன்னும் உண்டு...

1 comment:

Arul said...

அன்பின் மதுரபாரதி,

கட்டுரையை தவறுதலாக திஸ்கியில் இட்டுவிட்டீர்கள், யுனிகோடுக்கு மாற்றிவிடவும்

அன்புடன்,
இர.அருள் குமரன்