September 06, 2004

பாரதிக்கு வெண்பா அஞ்சலி



பம்மாத்துப் பாவலர் பாகுத் தமிழதனைச்
சும்மாத் துருப்பிடிக்க விட்டக்கால் - செம்மாந்துவீரத்
திருக்குரலால் வெற்றிக் கவிசமைத்த
காரக் கவிமகனே காப்பு.

மீசை வளர்க்கலாம் மேற்பாகை கட்டலாம்
ஆசையினால் உன்பேர் அணிந்திடலாம் - ஓசைக்
குரலெடுத்துப் பாடிடலாம் கோமகனே நின்போல்
வருவதுண்டோ நாவினிலே வாக்கு!

பாஞ்சாலி சூளுரைத்த பாட்டைப் படிக்காத
நோஞ்சான் தமிழன் நொடியட்டும் - வாஞ்சையுடன்
மோகக் குயிலியவள் மூட்டும் வெறியிசையைத்
தாகத்தால் மாந்தல் தவம்.

இருமையிலா மேனிலையில் எல்லாமும் நானே
ஒருமையெனப் பாடியவா ஒற்றைக் - கருமுகிலை
நண்பனிளங் காதலியாம் சேவகனாம் தாயுமெனும்
பண்பினுக்கோ ரெல்லை பகர்.

வேழம் மிதித்தெல்லாம் வீழுகில்லாய் நீயென்று
ஆழக் குரல்வளைய ழுத்துகிறோம் - பாழும்
பிரிவுகளால் பேதமையால் உட்பகையால் பின்னே
சரியுமுனம் நின்கவியே சார்பு.

No comments: