January 04, 2008

திருவெம்பாவை - 14

திருச்சிற்றம்பலம்

நம்மை மாறுபட்டவராக வளர்த்தாள் அன்னை!

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.


'நாம் எல்லோரும் குளிர்ந்த நீரில் குளிக்கிறோம். அப்போது நமது காதிலுள்ள குழைகள் ஆடுகின்றன; அழகிய நகைகளை அணிந்திருக்கிறோமே, அவை ஆடுகின்றன; நமது பூச்சரம் அணிந்த கூந்தல் அசைகிறது; பூச்சரங்களை மொய்த்த வண்டுகள் ஆடுகின்றன.

'இவ்வாறு நீராடுகையில் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற திருமறைப் பொருளான நாதனைப் பாடுவோம். அவன் திருமறையின் பொருளாக நின்ற விதத்தைப் பாடுவோம். அவனே சகலத்துக்கும் ஆதியும் அந்தமும் ஆன வகையினையும் பாடுவோம்.

'அவனை மட்டுமா பாடுவோம். தனது திருக்கையில் வளைகளை அணிந்த உமையம்மை நம்மை மட்டும் தனித்துவம் கொண்டோ ராக வேறுபடுத்தி வளர்த்தெடுத்தாளே, அவளது திருபாதங்களின் மேன்மையைப் பாடியபடியே நீராடலாம், வாருங்கள்'

சிறப்புக்குறிப்பு: மனிதனையும் ஒரு விலங்கு என்பது விஞ்ஞானம். மனிதனுக்குள்ளிருக்கும் விலங்குகளை ஒடுக்கி, தெய்வமாக்குவது மெய்ஞ்ஞானம். இவ்வாறு தெய்வத்தன்மையை அடைவது மனிதனுக்கே உரிய பண்பு. தேவருக்கும் இயல்வதல்ல. அந்த மனிதருள்ளும் ஒரு சிலரே இவ்வுண்மையை உணர்ந்து அகத்தேடலில், தன்னுள்ளே தெய்வத் தேடலில் இறங்குகின்றனர். இறையுணர்வு இல்லாமல், இரைதேடி, புகழ் தேடி, செல்வம் தேடி, உடலின்பம் தேடி, அவற்றையே வாழ்வின் நோக்கமாகக் கொண்டு எண்ணற்றோர் வாழ்க்கையை விரயமாக்குகின்றனர். 'நெஞ்சில் ஆரமுது உண்ணுதற்கு ஆசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ?' என்று பாரதி கூறியதும் இதைத்தான்.

Swami Vivekananda'தினந்தோறும் கோடிக்கணக்கான புழுபூச்சிகள் தோன்றி மறைகின்றன. நாமும் அவற்றைப் போலத் தோன்றி மடிந்து என்ன பயன்?' என்று வீரத்துறவி விவேகானந்தன் கேட்பது அதனால்தான். அவ்வாறு சிவனையே போற்றும் செம்மனம் கொண்டவராகத் தாம் இருப்பதில் இவர்களுக்கு மகிழ்ச்சி. இதனையே 'பேதித்து வளர்த்தெடுத்த பெய்வளை' என்று புகழ்கின்றனர் இந்தப் பூவையர்.

இன்னும் வரும்...

No comments: