January 05, 2008

திருவெம்பாவை - 15

திருச்சிற்றம்பலம்

பக்தரைப் பித்தராக்கும் பித்தன்

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.


இப்போது அதீத பக்திவயப்பட்ட ஒருவளின் அடையாளங்கள் சொல்லப்படுகின்றன.

'மார்பகத்தில் அணிந்த கச்சினைத் தாண்டியும் பல நகைகளை அணிந்தவர்களே! இவள் 'எம்பிரான், எம்பிரான்' என்றபடி அவன் புகழை வாய் ஓயாமல் கூறுகிறாள். அதனால் மனதிலே ஏற்பட்ட இன்பத்திலே கண்ணில் அடக்கமுடியாமால் நீர் பெருகி வழிகிறது.

'நிலத்திலே ஒருமுறை வீழ்ந்து நமஸ்கரிக்கிறாள். ஆனால், பிற தேவர்களை இவள் வணங்க மாட்டாள்.

'இவ்வாறு பேரரசனான சிவபெருமான் மீது பித்துப் பிடித்துப் போகும்படியாகச் செய்யும் அந்த ஞானத்திரளின் தாளை வாயாரப் பாடியபடி, அழகான பொய்கையில் பாய்ந்து நீராடலாம், வாருங்கள்!'

சிறப்புப்பொருள்: பக்தி வயப்பட்டவர்கள் தம்மை அறியாமல் உறக்கத்திலும் விழிப்பிலும் இறைவனி திருநாமத்தைக் கூறிய வண்ணம் இருப்பர். எந்த ஒன்றையும் எண்ணியபடியே இருந்தால் அதைப் பற்றிய நுண்ணுணர்வு மாறிவிடும். அதாவது மரத்துப் போய்விடும். ஆனால் இறைவன் திருநாமமோ கூறக்கூற அதிக மகிழ்ச்சியைத் தருவதோடு, ஒவ்வொரு முறையும் கண்களில் நீர் துளிர்த்துவிடுக்கிறது. மனத்தை உருக்குவதால் இது நிகழ்கிறது.

Ramakrishna Paamahamsaதனக்கென்று எந்தத் தேவையும் இல்லாத ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் எப்படி பவதாரிணி மாதாவின் சன்னிதியில் கண்ணீர் பெருக்கினார்! அதுமட்டுமா? அழிந்துபோகும் செல்வத்துக்காகவும் மனைவிக்காகவும் மக்களுக்காகவும் கண்ணீர் பெருக்குகிறீர்கள், அதில் பத்தில் ஒரு பங்கை இறைவனுக்காகப் பெருக்குங்கள், இறைவனைக் காணலாம் என்று கூறினாரே.

நாதன் நாமமாகிய நமச்சிவாயம் ஒருவரைக் 'காதலாகிக் கசிந்து கண்ணீர்' மல்க'ச் செய்யும் என்று ஞானசம்பந்தப் பெருமானும் சொல்கிறாரே. அதுமட்டுமா,

யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே


'நானும் எனது நெஞ்சும் என் பக்தியும் எவ்வளவோ பொய்மை கொண்டனவாக இருக்கின்றன. நான் தீவினை நிரம்பியவனாக இருக்கிறேன் ஆனாலும் நான் மனமுருகி அழுதால், உன்னைத் தருகிறாய்' என்று அழுகையின் பெருமையை மாணிக்க வாசகர் கூறுகிறார்.

அழுவது பேடித்தனம் என்றொரு கருத்து உண்டு; அது ஆண்மைக்கு அழகல்லவாம். ஆனால் இந்த நோக்கில் 'ஆண்மை' என்பது அகங்காரத்தைக் குறிக்கிறது. இறைவனின் சன்னிதியில் அகங்காரத்தை விடும்போது அழுவது சாத்தியமாகிறது. அகங்காரம் நீங்கும்போது சரணாகதி சாத்தியமாகிறது.

இன்னும் வரும்...

No comments: