January 05, 2008

திருவெம்பாவை - 17

திருச்சிற்றம்பலம்

Mukkannanமூன்றாம் கண்ணால் நமது மலங்களை எரித்துவிடுவான்

செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்


'சிவந்த கண்களையுடைய திருமாலுக்கும், திசைக்கொன்றாக நான்கு முகம் கொண்ட பிரம்மனுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத மெய்ஞ்ஞானப் பேரின்பம் நமக்கு மட்டும் கிடைக்கும் படியாகச் செய்பவன் சிவன்.

'அவன் நமது மலங்களை அறுத்து, பாவை நோன்பு நோற்கும் இல்லந்தோறும் மணப்பொடிகள் விரவிய கூந்தலைக் கொண்ட உமையம்மையை எழுந்தருளச் செய்திருப்பதோடு, தனது சிவந்த தாமரை மலர்ப் பாதங்களைத் தந்தருளுகிறான்.

'அவனே விரூபாட்சன் என்று சொல்லப்படும் மூன்றாவது கண்ணைக் கொண்ட அரசன். அடியவர்களுக்கு மரணமிலாப் பெருவாழ்வை நல்கும் ஆரமுதம். எமது பெருமானும் அவனே. அவனது புகழைப் பாடியபடி, நமக்கெல்லாம் நன்மை வாய்க்கும்படித் தாமரைப் பொய்கையில் பாய்ந்து நீராடுவோம், வாரீர் தோழியரே!

சிறப்புப்பொருள்: பாவை நோன்பு நோற்கும் பெண்டிர் மலைமகளாம் பார்வதியைக் குறித்து நோன்பு செய்வர். எனவேதான் இப்பாடலில் 'இங்கு நம் இல்லங்கள் தோறும் கொங்குண் கருங்குழலி எழுந்தருளி' இருப்பதாகக் கூறுகின்றனர். இவ்வாறு செய்வதாலே தேவருக்கும் அரிக்கும் அயனுக்கும் கிட்டாத பேரின்பம் இவர்களுக்கு வாய்க்கிறதாம்.

மனிதப் பிறவி எடுத்துவிட்டால் அவர்களிடம் ஆணவம், கன்மம், மாயை என்றை மும்மலங்களும் அவர்தம் ஆன்மாவைச் சூழ்ந்து பரஞ்சோதியை அறியவிடாமல் தடுக்கின்றன. ஆனால் அவனைப் பாடி நோன்பிருந்தால் அவனே நம்மைக் 'கோதாட்டி' அதாவது நமது மலங்களை அகற்றி, பின் தனது செங்கமலப் பொற்பாதத்தைத் தந்தருளுகிறான்.

அவனது அங்கண்ணான விரூபாட்சத்தால் நம்மை நோக்கினால் அதிலிருந்து புறப்படும் ஞானாக்கினி நமது மலங்களை எரித்து நம்மிலிருக்கும் ஞானச்சுடரைப் பிரகாசிக்கச் செய்கிறது.

இன்னும் வரும்...

No comments: